வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, June 4, 2015

அருள் விளக்கங்கள் 


வள்ளுவம் கூறும் கடவுள் வாழ்த்து 

திருக்குறள் திருவள்ளுவர் இயற்றிய ஆயிரத்துமுன்னூற்று முப்பது பாடல்களில் அவர் மக்கள் மனதிற்கு இதம் தரும் வாசகங்களாக

பொருள்பல கூறும் குறுகிய குறளாக எடுத்து இயம்பி உள்ளார். அதில் கீழே குறிப்பிட்டுள்ள குறள்கள் ஐந்தும் கடவுள் வாழ்த்தில் வரும் பாடல்கள்.

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"

அகரம் எனப்படும் அ எழுத்து எழுத்துக்கெல்லாம் முதன்மையானது அதே போல் இறைவன் எமக்கு எல்லாம் முதன்மையானவர் அவரை வழிபட்டு எமது காரியங்களை ஆற்றத்தொடங்க வேண்டும். இவ் உலகிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குபவரும் இறைவன்.

"கற்றதனால் ஆய பயனென் கொல்வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்"

கற்றகல்வி பயன் ஆக வேண்டுமெனின் உண்மை அறிவாக விளங்கும் இறைவனின் தூய திருவடிகளைத் தொழுதலே கற்றதன் பயனாகும்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்."

அன்பர்களின் இதயமலரில் குடிகொண்ட இறைவனை இடைவிடாது துதிசெய்பவருக்கு அவர்கள் இப்பூவுலகில் நீடூழி வாழ அருள் புரிவார்.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை எப்போதும் துதிப்பவர்க்கு என்றும் எங்கும் எத்துன்பமும் இல்லை.

"இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு"

இறைவனின் உண்மைப்பொருளை புரிந்து கொண்டு அவரை விரும்புகிறவர்களின் அவர்கள் அறிவை மயக்கி இருள் தருகின்ற நல்வினை தீவினை இருவினைகளும் அணுகி துன்பம் செய்யாது.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கற்றகல்வி தமிழ் மொழியில் அகரம் அடிப்படையானதன் அவசியம் முதல், இறைவன் அகிலத்தை தோற்றுவித்ததில் அவருக்கு நாம் கடமைப் பட்டுள்ளதை திருவள்ளுவர் எடுத்துக் கூறிய விதமும் எல்லாவற்றுக்கும் அடிப்படையான இறைவன் ஆதி தலைவன் அவனது அரும் சக்தி எமது வாழ்க்கை மேம்பட எவ்வளவு தேவை என்பதையும் அழகாக சொல்லியுள்ளார்.

அடுத்து கடவுள் வாழ்த்தின் ஏனைய குறள்கள் ஐந்தும் மனிதனை புனிதனாக்குவதற்கு முடிவுறும் வாழ்க்கை முடிவடையாத இறைவனின் பால்நாம் செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள் எவை என்பதை வழியுறுத்துகின்றன. அவற்றையும் இங்கு காண்போம்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார்"

ஐம்பொறிகள் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐந்தின் தாகங்களை அவித்தழித்த இறைவனின் பொய்களற்ற ஒழுக்க நெறிகளை முறையோடு ஒழுகுபவர் நிலைத்து வாழ்வர்.

"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது"

தனக்குவமை இல்லாதவன் இறைவன் ஒப்புயர்வு அற்ற அவன் பாதங்களை பணிபவர்களைத் தவிர மற்றவர்க்கு அவர்கள் துன்பச்சுமைகளை மாற்றுவது இயலாது.

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தாற்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது"

அறக்கடலாக திகழும் இறைவனின் திருவடிகளை எண்ணிச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எளிது. பொருட்கடல் இன்பக்கடல் வேறு எந்த மாகடலையும் நீந்திக் கரையேறுவது இறைவனை வழிபடாதவர்க்கு அரிது.

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"

கொள்கைகள் அற்ற உணர்ச்சிகளை உணராத ஐம்பொறிகள் இருந்தும் பயனற்றவை. அதுபோல் எண்குணங்களை உடைய இறைவன் திருவடிகளை வணங்காத தலைகளும் பயனற்றவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்"

பிறவி எனும் பெரும் கடலை நீந்திக் கரையேற இறைவனின் பாதங்களை எண்ணித் துதிக்க வேண்டும். இல்லாவிடில் பெரும் துன்பக்கடலில் நீந்தி கரையேற முடியாது தவிக்க நேரிடும்.

''அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்த குறள்'' ஆமாம் எவ்வளவு அழகாக ஒளவைப் பாட்டி திருவள்ளுவர் பாடிச்சென்ற திருக்குறளுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார். அணு மிகச்சிறியது. அதைத்துளை போட்டு அதற்குள் ஏழு கடல்களை அடக்கி இருப்பது போல் அவர் இயற்றிய குறளும் அதன் பொருளும் இருப்பதை சுருக்கமாக ஒளைவையார் கூறியுள்ளதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

குறள் ஒன்றேமுக்கால் அடி அதன் பொருள் பல அடிகளை தாண்டி செல்கிறது. உண்மைதான் திருவள்ளுவர் எப்படி அழகாக அமைதியாக அன்பாக அரவணைப்பாக ஆழமாக கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார். இறையன்பு எத்தகையது ,எமக்கு அவரது சக்தி எவ்வாறு உதவி செய்யும், எந்நேரத்திலும் எமக்கு உறுதுணை புரியும் என்பதை திருவள்ளுவர் போல் இவ்வளவு சுருக்கமாக குறளும், விளக்கமாக பொருளும் கூறி விட யாரால் முடியும். சிந்தை தெளிவடைய திருக்குறள் படிப்போம்.



No comments:

Post a Comment